சட்டப் பேரவையில் அமர்ந்து கொண்டு ஆபாச படம் பார்த்தது ஒன்றும் தேச துரோக குற்றம் அல்ல என்று 2012 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப் பேரவையில் ஆபாச படம் பார்த்த தற்போதைய  துணை முதலமைச்சர் லட்சுமணின் சவடிக்கு ஆதரவாக சட்ட அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. மேலும் அதிருப்தியாளர்களை சமாளிக்கும் வகையில் லட்சுமண் சவடி, அஸ்வத் நாராயணன், கோவிந்த கார்ஜோல் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2012ஆம் ஆண்டு சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பானபோது, தற்போது துணை முதல்வராக உள்ள லட்சுமணன் சவடி, சட்டமன்றத்திற்குள் தனது இருக்கையில் ஆபாசப் படம் பார்த்தது தெரியவந்தது. 

அதனை அருகிலிருந்த அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டிலும் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அப்போது கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த லட்சுமணன் சவடி தனது பதவியை ராஜினாமா செய்தார்.இந்த நிலையில் தற்போது அவரை துணை முதல்வராக நியமனம் செய்ததற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக சட்டத் துறை அமைச்சர் மதுசாமி, “சட்டமன்றத்தில் ஆபாசப் படம் பார்ப்பது தேசதுரோக குற்றச்சாட்டு அல்ல. தர்க்க ரீதியாக அதனை செய்யக்கூடாதுதான். ஆனாலும் அது ஒன்றும் தேசத்துரோகம் இல்லையே. எதிர்பாராத விதமாக அதனை அவர் பார்த்துவிட்டார். எல்லோரும் ஒரு காலகட்டத்தில் தவறு செய்பவர்கள்தான்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அவர் யாரையும் ஏமாற்றவில்லை அல்லது தேசவிரோத செயல்களில் ஈடுபட்டுத் தண்டிக்கப்படவில்லை. அதற்காக அவர் ஆபாசப் படம் பார்த்தையும் சரி என்று சொல்லவில்லை. அதற்காகவே அவரை விமர்சிப்பதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.