தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்த மாதிரி சீன் காட்டுறாங்க.. இங்க காலூன்ற முடியுமா..? முத்தரசன் தாறுமாறு.!
தமிழ்நாட்டில் ஒரு போதும் பாஜக காலூன்ற முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உத்தரபிரதேசம் மாநிலம் லக்கீம்பூர் சம்பவத்துக்கு இடதுசாரிகள் உள்ளிட்டஅனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், பிரதமர் மோடியும் பாஜகவும் கண்டிக்காமல் இருப்பது, அந்தச் சம்பவத்தை ஆதரித்து ஊக்குவிப்பது போல இருக்கிறது. மத்தியுல் உள்ள பாஜக அரசு நிறைவேற்றிய புதிய வேளாண்மை திருத்தச் சட்டங்களையும் மின் திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்காலத்தில் போராட்டங்கள் தீவிரம் அடையும்.
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீபாவளி நெருங்கும் வேளையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் எல்லா அத்தியாவசியப் பொருட்களும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, ஜி.எஸ்.டி. முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் ஏதோ பாஜக வளர்ந்துவிட்டதைப் போல ஒருவித மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு போதும் பாஜக காலூன்ற முடியாது.” என்று முத்தரசன் தெரிவித்தார்.