தமிழகத்தில் 20 தொகுதிகளிலும் பாஜக வாஷ்அவுட் ஆயிடும்... சாபம் விட்ட திருமாவளவன்..!
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றி பெற முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 6 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. தொடர்ந்து விசிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்துவந்தார் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். இந்நிலையில் சென்னையில் கொளத்தூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் திருமாவளவன் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பிரசாரக் கூட்டங்களில் திருமாவளவன் பேசும்போது, “ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது மோடியா? இந்த லேடியா? என்று சவால் விட்டார். ஆனால், இன்று அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவரிடம் கூனி குறுகி நிற்கிறார்கள். தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாததால் தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது. பாஜகவை வீழ்த்துவதற்காகத்தான் திமுக கூட்டணி உருவானது. எனவே, பாஜகவால் தமிழகத்தில் ஒரு போதும் காலூன்ற முடியாது.
இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அனைவரையும் அக்கட்சி பலிகடாவாக்கிவிட்டது. ஏனென்றால், பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றி பெற முடியாது. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்புவுக்கு சினிமா மவுசு போய்விட்டது. அதனதால்தான் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.” என்று திருமாவளவன் பேசினார்.