முதல்வரை புகழ்ந்து பேசச் சொல்லி ஜீயரை வற்புறுத்துவதற்கு பிச்சை எடுக்கலாம்...! சேகர் பாபுவை சீண்டும் அண்ணாமலை
இந்து தர்மம் மற்றும் தமிழக கலாச்சாரத்தை எதிர்த்து தமிழகத்தில் கோயில்கள் இடிக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஜீயர்
தருமபுர ஆதினம் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் தமிழக அரசு ஏற்கனவே தடை விதிருத்திருந்த நிலையில், மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பகாமன்னார் பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. இதை யாராலும் தடுக்க முடியாது. எந்த அமைப்பிற்கும் அந்த அருகத்தையும் கிடையாது. அரசுக்கும் அந்த அருகதை கிடையாது. முடிந்தால் இந்த பட்டினப் பிரவேசத்தை தடுத்து பாருங்கள். யாராலும் முடியாது. இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படும் எந்த அமைச்சரும், எம்எல்ஏவும் சாலையில் நடமாட முடியாது. இந்து மதத்திற்கு எதிரான துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுகிறேன் என கூறியிருந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தமிழக அரசு பட்டின பிரவேச நிகழ்விற்கு அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து அறநிலையத்துறை தொடர்பாக நிகழ்வில் கலந்து கொண்ட ஜீயர், அமைச்சர் சேகர்பாபுவோடு சேர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதினங்கள் மடங்களில் தர்மத்திற்கு உட்பட்டு, பாரம்பரியமாக நடைபெறவுள்ள நடக்கக் கூடிய எந்த நிகழ்வை மாற்ற வேண்டியதில்லையென கூறினார். அப்போது அருகில் இருந்த அமைச்சர் சேகர்பாபு, ஜீயரிடம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவியுங்கள் என காதில் கூறினார்.
திமுக-காங்கிரஸ் கட்சிக்கு மன வியாதி
இதனையடுத்த பேசிய ஜீயர், பட்டின பிரவேச நிகழ்விற்கு அனுமதி கொடுத்ததற்கு தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். முதலமைச்சர் நியாயமாக நடந்து கொள்கிறார். எந்த மதத்திற்கும் முதலமைச்சர் அநியாயமாக எதுவும் செய்யவில்லையென கூறியவர், தங்களுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் முதலமைச்சருக்கு தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இந்தநிலையில் திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசை விமர்சித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அப்போது சென்னையில் உள்ள ஈசிஆர் சாலைக்கு கலைஞர் பெயரை சூட்டியுள்ளார். திருவாரூரில் கூட ஒரு சாலைக்கு கலைஞர் பெயரை வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்த மன வியாதி குடும்ப அரசியலில் ஆட்சி செய்பவர்களுக்கு உருவாகும் என கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு 70 வருடங்களாக இந்த நிலை உள்ளதாகவும், உயிரோடு இருக்கும் போதே அவர்கள் பெயரை வைத்துக்கொள்கின்றனர். ஜவர்ஹலால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் தங்கள் பெயரை திட்டங்களுக்கு சூட்டியுள்ளனர். இந்த வியாதி திமுவிற்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோயில் வெளியே பிச்சை எடுக்கலாம்- அண்ணாமலை
தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதலமைச்சரை புகழ்ந்து பேசும்படி அமைச்சர் சேகர் பாபு ஜீயரிடம் கூறுகிறார். இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம் என கூறினார். இதற்கு கோயில் வெளியே திருவோடு எடுத்துக்கொண்டு பிச்சை எடுக்கலாம் என கடுமையாக விமர்சித்தார். இதெல்லாம் ஒரு பொழப்பா இதற்கு ஒரு அமைச்சரா என விமர்சித்தார் அறிவாலத்திற்கு வருபவர்களையெல்லாம் முதலமைச்சருக்கு துதி பாடு என்று அமைச்சர் கூறிவருவதாகவும் கூறினார்.