பாஜகவின் வக்கிரப் புத்தி மாறவில்லை... நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ஜோதிமணி!
மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிற இந்த சூழலில்கூட பாஜகவின் வக்கிரபுத்தி மாறவில்லை என்று கரூர் எம்.பி. ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார்.
கொரோனா விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவையும் பிரதமர் மோடி உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்துவருகிறார் நடிகர் சித்தார்த். பதிலுக்கு பாஜகவினரும் நடிகர் சித்தார்த்தை விமர்சித்துவருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பகிர்ந்த நிலைத்தகவலில், “கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும் என் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்து 500 போன் அழைப்புகள் வந்துவிட்டன. பாஜகவினர் என் நம்பரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அனைத்து தகவலையும் காவல் துறையிடம் ஒப்படைக்க இருக்கிறேன்” என்று சித்தார்த் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சித்தார்த்துக்கு ஆதரவாக பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையே நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “பணமதிப்பு நீக்கத்தின்போது மோடியின் மக்கள் விரோதசெயலை விமர்சித்ததற்காக பிஜேபி எனது அலைபேசி எண்ணை பொதுவெளியில் வெளியிட்டது மட்டுமல்லாமல் ஒரு பாலியல் தொழிலாளியின் எண் என்று வேறு குறிப்பிட்டார்கள். பிஜேபியின் கேவலத்திற்கு நான் அஞ்சவில்லை. மக்கள் எனக்கு ஆதரவாக நின்றார்கள்.
இதே போல ஊடகவியலாளர்களும் பிஜேபியின் ஆபாச தாக்குதலுக்கு உள்ளானார்கள்.இப்பொழுது நடிகர் சித்தார்த். மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிற சூழலில்கூட பாஜகவின் வக்கிரபுத்தி மாறவில்லை. உண்மை எப்பொழுதும் உரத்த குரலில் ஒலிக்கும். அதன் குரல்வளையை எதனாலும் நெறிக்கமுடியாது. தொடர்ந்து மோடி அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை விமர்சிப்போம்.” என்று ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.