ஏசி காரை மாத்து! எஸ்கார்டு காருல ஏத்து! தினகரனை நோகடித்த டெல்லி ஆர்டர்...
தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதான வழக்கில் தினகரனை கைது செய்து கவர்மெண்ட் செலவில் தென்னிந்தியாவை சுற்றிக்காட்ட துவங்கியிருக்கிறது டெல்லி போலீஸ்!
ஹும், அரசாங்க செலவில் ஃபிளைட்டில் சம்மர் டூரென்றால் ஜாலிதான் போங்க! என்று காண்டு ஆகாதீர்கள். செம்ம கடுப்பில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன்.
எதுக்காம்?
டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்ப தினகரனை ஏர்போர்ட்டில் இருந்து தனியார் டிராவல்ஸ் கார் ஒன்றில் ஏற்றி பெசண்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். டி.டி.வி.யின் சகா மல்லிகார்ஜூனாவை அதிரடி படை போலீஸ் இருந்த டெம்போவில் ஏற்றிக் கொண்டனர்.
பின் அங்கிருந்து டி.டி.வி.யின் வீடு நோக்கி கிளம்பினார்கள். அப்போது தினகரனை போலீஸ் எஸ்கார்டு காரில் ஏற சொன்னது டெல்லி போலீஸ். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் நிர்பந்தப்படுத்தி அதில் ஏற்றினர். இதில் டென்ஷனாகி கடுகடுத்தது எப்போதும் மிஸ்டர் கூல் ஆக இருக்கும் தினகரனின் முகம். அதே நேரத்தில் மல்லிகார்ஜூனாவை தனியார் டிராவல்ஸ் காரில் ஏற்றினார்கள். இது டி.டி.வி.யை மேலும் டென்ஷனாக்கியது. ஆனாலும் என்ன செய்துவிட முடியும்!
தினகரனை இப்படி பிரைவேட் காரிலிருந்து இறக்கி எஸ்கார்டு காருக்கு மாற்றுவதற்கு டெல்லியில் இருந்து வந்த ஒரு உத்தரவே காரணம் என்கிறது தினகரனின் ஆதரவு வட்டாரம்.
”ஏர்போர்ட்ல இருந்து அவரை தனியார் கால் டிராவல்ஸ் கார்ல மரியாதையா கூட்டிட்டு வந்ததை தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு கூட்டம் மொபைல்ல போட்டோ எடுத்து டெல்லிக்கு அனுப்புச்சு. அதைத்தொடர்ந்தே இந்த அவமரியாதை! இப்படியே விட்டால் இன்னும் என்னென்ன பண்ணுவாங்களோ தெரியலை.
டெல்லியில் நான்கு நாட்கள் விசாரணைக்கு பின் அவர் கைதான அன்னைக்கே அவரோட முதுகிலேயும், தோள்ளேயும் கை வெச்சு டெல்லி போலீஸார் சிலர் நெம்பியதும் இப்படியான உத்தரவுகளின் விளைவே. எல்லாவற்றையும் அண்ணன் பல்லைக் கடிச்சு பொறுத்துக்குறார். திருப்பி கொடுக்குற நாள் நிச்சயம் வரும்.” என்று பொங்குகிறார்கள்.