டெல்லியின் அடுத்த குறி 'விவேக்' கவனமாக திரட்டப்படும் அதிரவைக்கும் ஆதாரங்கள்!
சசிகலா, தினகரனை அடுத்து டெல்லி மேலிடம் இளவரசி மகனை குறிவைத்து, இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்காக கணக்கில் வராத சசிகலா குடும்பத்தின் சொத்து ஆவணங்கள் கவனமுடன் திரட்டப்பட்டு வருகின்றன.
சசிகலா பெங்களூரு சிறையில் இருக்கிறார். தினகரனும் கைது செய்யப்பட்டு விட்டார். ஆனாலும், சசிகலா குடும்பமே, ஆட்சியை இயக்கி கொண்டிருக்கிறது என்று டெல்லி மேலிடம் உறுதியாக நம்புகிறது.
ஆகவே, கார்டனின் அனைத்து பண பரிவர்த்தனை போக்குவரத்தையும் அறிந்த, இளவரசி மகன் விவேக்கை நோக்கி தனது முழு கவனத்தையும் திருப்பி இருக்கிறது டெல்லி.
போயஸ் கார்டனில், விவேக் மூலம் இதுவரை நடந்து வந்த, கணக்கில் வராத பண பரிவர்த்தனைகள், வாங்கி குவிக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த அனைத்து தகவல்களையும் திரட்டி வருகின்றனர் அதிகாரிகள்.
சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், மிடாஸ் மதுபான ஆலை, ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர், ஜாஸ் சினிமாஸ் என கண்ணுக்குத் தெரிந்த சொத்துக்கள் ஒரு பக்கம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மறுபக்கம், மன்னார்குடி உறவுகளின் பெயர்களில் வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துக்கள், உதவியாளர் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள், தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் வாங்கப்பட்ட நிலங்கள், பங்கு முதலீடு ஆகிவற்றுக்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
அதேபோல், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, டெல்டா மாவட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சொத்துக்கள் என அனைத்தையும் மிகத் துல்லியமாக அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
இதுபற்றிய அனைத்து வைவரங்களும், பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து, சேகரித்து டெல்லிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட அதிரடி சோதனை, அதன் பிறகு பன்னீர் தரப்பு கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரைடு ஆகியவற்றில், அதிகாரிகளுக்கு ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து, கணக்கில் வராத சசிகலா குடும்பத்தின் சொத்துக்களை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டும் வேலையில் மத்திய நிதி அமைச்சகம் இறங்கி உள்ளது.
அதற்காக, விவேக், டாக்டர்.வெங்கடேஷ், டாக்டர்.சிவக்குமார், தினகரன் மனைவி அனுராதா உள்ளிட்டவர்கள் தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளனர்.
அதன் மூலமே சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்த முடியும் என்று டெல்லி மேலிடம் நினைக்கிறது.
அதற்கு, விவேக்கை வளைப்பதே சரியான வழி என்பதால், மத்திய அரசின் ஒட்டு மொத்த பார்வையும் விவேக்கை நோக்கி திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது,