பாஜக பிரமுகர் அப்பாவா..? அம்மாவா? இல்லை பிள்ளையா..? நீதிமன்றத்தில் பாய்ண்டை வைத்த தமிழக அரசு..!
நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி.
ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து, பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஆய்வுக் குழு அமைக்க உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு வழக்கறிஞர் பி.முத்துகுமார் ஆகியோர் பதில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி. குழுவின் அறிக்கை, அரசின் நடவடிக்கைகள் குறித்து யூகத்தின் அடிப்படையில் மட்டுமே பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு 84343 மனுக்கள் வரப்பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
நீட் குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள கரு.நாகராஜன் மாணவரோ, பெற்றோரோ இல்லை. அரசியல் கட்சி நிர்வாகியான கரு.நாகராஜன் விளம்பரத்திற்காக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரு நாகராஜனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.