மோடியை அவமானப்படுத்தினால் இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்…. கொந்தளிக்கும் தமிழிசை …
மோடியை அவமானப்படுத்தினால் இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்…. கொந்தளிக்கும் தமிழிசை …
நீட் விவகாரத்தில் மோடியை விமர்சனம் செய்வது வேதனையளிப்பதாகவும், மாணவி அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது அரசியல் சூழ்ச்சி என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவி அனிதாவை இழந்தது மிகப்பெரிய துயரம். வேதனையானது என்றும் எந்தவகையிலும் ஈடுசெய்ய முடியாதது என கூறினார்.
வறுமையுடன் போராடி சாதித்த அந்த குழந்தையை நீட் தேர்வு போராட்டத்துக்காக டெல்லிவரை அழைத்து சென்று இருக்கிறார்கள். இந்த பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோது ஒரு வேளை நீட் தேர்வில் மருத்துவம் கிடைக்காமல் போனால் விவசாயம் படிப்பேன் என்று சொன்னார். துணிச்சம் தைரியமும் நிறைந்த அந்த குழந்தை திடீரென்று மனம் மாறி தற்கொலை செய்து கொண்டது எப்படி? என கேள்வி எழுப்பினார்.
அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? இதன் பின்னணியில் சூழ்ச்சி உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது எனவும் அவர் கூறினார்.
எல்லோரையும் வாழ வைக்கவும், பாதுகாக்ககவும்தான் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார் என தெரிவித்த தமிழசை, தாங்கள் அரசியல் பிழைப்புக்காக மோடி எதுவும் செய்யவில்லை என குறிப்பிட்டார்.
பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்ற நச்சு கருத்துக்களை நயவஞ்சகமாக விதைத்து வரும் இந்த அரசியல் கட்சிகளின் முகமூடி கிழிக்கப்படும் என அவர் கூறினார்.
மக்கள் நலத்திட்டங்களை செய்து வரும் மோடியை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.
துடைப்பத்தாலும், செருப்பாலும் அடித்து அவமானப்படுத்தும் கீழ்த்தரமான அரசியல் வாதிகளை இனியும் பொறுக்க மாட்டோம் என்றும் நல்லது செய்துவிட்டு அவமானப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என ஆவேசமான தமிழிசை. மக்களை ஏமாற்றி சாதி அரசியல் செய்வது யார் என்பதை மக்களிடம் எடுத்து சொல்வோம் என தமிழிசை கூறினார்