பிரதமர் மோடியின் சொந்த மாவட்டத்தில் காங்கிரஸின் “கை” ஓங்கியது..! பாஜக பின்னடைவு..!
பிரதமர் மோடியின் சொந்த மாவட்டமான மேஹ்சனாவில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
குஜராத்தில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.
குஜராத்தில் மட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.
குஜராத்தில் பாஜக 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 85 தொகுதிகளில் பாஜகவும் 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளன.
குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களை பாஜக கைப்பற்றிவிடும். எனினும் மோடியின் சொந்த மாவட்டமான மேஹ்சனாவில் மொத்த 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில், 5 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக முன்னிலை வகிக்கிறது.
அதேபோல், இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக முன்னிலை வகித்துவரும் நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பிரேம்குமார் துமால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். மேலும், குஜராத்தில் வட்காம் தொகுதியில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட தலித் சுயேட்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார். இவையெல்லாம் பாஜகவின் மீதான மக்களின் பரவலான எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில் அமைந்துள்ளன.