குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா தோற்கும்... ராஜ் தாக்கரே கணிப்பு!
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி தோல்வியைச் சந்திக்கும். பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அவர் பேசத் தொடங்கியதும் கலந்து சென்றனர். இது எப்போதும் நடக்காத ஒன்று, இது மக்கள் அளிக்கும் செய்தி என்று நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கு காரணம் ராகுல்
மும்பை கல்யான் பகுதியில் நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு பாதி காரணம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தான் காரணம். கடந்த தேர்தலில் மோடியை கிண்டல், கேலி செய்து ராகுல் பேசியதால்தான் மக்களிடம் எளிதாக மோடியின் பெயர் சென்று சேர்ந்து வெற்றி பெற முடிந்தது.
15 சதவீதம் சமூக ஊடகங்கள் மூலமாகவும், 20 சதவீதம் பா.ஜனதா தொண்டர்களாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினாலும், மற்றவை மோடியின் தோற்றத்தினாலும் வெற்றி பெற முடியாது.
தோல்வி அடையும்
குஜராத் மாநிலத்தில் இப்போது இருக்கும் நிலவரத்தை பார்க்கும் போது அங்கு பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடையும் எனத் தெரிகிறது.ஏனென்றால், சமீபத்தில் பிரதமர் மோடி பேசிய பொதுக்கூட்ட நிகழ்ச்சி வீடியோவைப் பார்த்தேன்.
அதில் மோடி பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த மக்கள் கலைந்து செல்லத் தொடங்கினர். இதற்கு முன் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை, இப்போது நடக்கிறது என்றால், மக்கள் எதையோ உணர்த்துகிறார்கள் என்பதைத்தான் கூறுகிறது.
சாதனைதான்
குஜராத் சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாயிலாக 150 இடங்களுக்கு மேல் பா.ஜனதா கைப்பற்றினால், அதை மிகப் பெரிய சாதனையாகத்தான் பார்க்க வேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
ஆனால், இங்கு தேர்தல் ஆணையம் ஒருவித நெருக்கடிக்கு ஆளாகி செயல்பட்டதுபோல் இருந்தது. தேவையில்லாமல் தேர்தல் தேதியை அறிவிக்காமல் தாமதம் செய்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராகுல்காந்திதான் சிறந்தவர்
சமீபகாலமாக சிவசேனா கட்சியிலும் பா.ஜனதாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல், கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் பேசுகையில், “ மோடியின் புகழ் தேய்ந்து வருகிற௸ு. ராகுல்காந்தி தான் நாட்டை வழிநடத்த தகுதியானவர்’’ என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.