பாஜக உண்ணாவிரதம்: வயிற்று செரிமான பிரச்சனை.. அண்ணாமலையை ஓங்கி அடித்த அழகிரி..
தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் மூப்பனார் ஆனால் ஜி.கே வாசன் சில சலுகைகளுக்காக பாஜகவை ஆதரிப்பதாக மறைமுகமாக கடுமையாக சாடினார்.
நாடாளுமன்றத்தில் நியாயமான கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கத்தியும் குதிரையும் இல்லாத தலைவராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் உள்ளதாகவும் அவரை தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இணைத்துக் கொள்ள முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சேர்ந்த நிர்வாகிகள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.இணைப்பு விழாவில் பேசிய கே எஸ் அழகிரி, பாஜகவுடன் எந்த விதத்திலும் சமரசம் கிடையாது என்று, தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் மூப்பனார் ஆனால் ஜி.கே வாசன் சில சலுகைகளுக்காக பாஜகவை ஆதரிப்பதாக மறைமுகமாக கடுமையாக சாடினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே. எஸ் அழகிரி, நாடாளுமன்றத்தை திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் முடக்குவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும், அரசின் குறைபாடுகளை கேள்வி கேட்க வேண்டும் என்றுதான் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் வாய்ப்பளித்து உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக பாஜகவினர் உண்ணாவிரதம் இருப்பது வயிற்று செரிமான பிரச்சனை யாகத்தான் மக்கள் எடுத்துக் கொள்வார்கள் என அவர் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பொறுப்பிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் தானே தொடர்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரிவித்தார்.