இவங்க ரெண்டு பேரும் ஒழிஞ்சாலே மக்களுக்கு நல்லது நடக்கும்! ஹெச்.ராஜா
திராவிட கட்சிகளின் ஆட்சி ஒழிந்தால்தான் தமிழக மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
பேருந்து கட்டண உயர்வை அடுத்து, தமிழகம் முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும், எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழக மக்கள் துன்பத்தில் உள்ளனர். இவர் கெட்டவர் என்று அவர்களுக்கும், அவர் கெட்டவர் எனக் கூறி இவர்களுக்கு மக்கள் மாறி மாறி ஓட்டு போட்டதால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திராவிட கட்சிகளின் ஆட்சி ஒழிந்தால்தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். அவர்களைக் காப்பாற்ற பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என்று ஹெச்.ராஜா பேசினார்.