இமாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை.. ஆனால் முதல்வர் வேட்பாளருக்கு பின்னடைவு..!
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகித்துவரும் நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமாலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.
குஜராத்தில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 106 தொகுதிகளிலும் காங்கிரஸ் 73 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கு நவம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இமாச்சலில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில், பாஜக 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
இமாச்சலில் பாஜக முன்னிலை வகித்து வரும்போதிலும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான பிரேம் குமார் துமால் பின்னடைவை சந்தித்துள்ளார். சுஜன்பூர் தொகுதியில் போட்டியிட்ட பிரேம் குமார் துமால், 1709 ஓட்டுகள் பின் தங்கி உள்ளார்.
ஆனால், பாஜகவை விட காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ள போதிலும் முதல்வர் வீரபத்ர சிங் முன்னிலையில் உள்ளார்.