முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு.. சர்ச்சையில் சிக்கிய பாஜக பிரமுகர்.. நள்ளிரவில் போலீஸ் கைது !
முதல்வர் மு.க ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு :
பாஜக ஸ்தாபக தின நிகழ்ச்சி தமிழ்நாடு முழுக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6ஆம் தேதி பாஜக சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் உரையாற்றினார். பாஜகவின் தேர்தல் வெற்றிகள், பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த வரலாறு, பாஜக கடந்து வந்த பாதைகள் பற்றி அவர் பேசினார்.
அதோடு தமிழ்நாட்டில் ஏன் பாஜக வளர்ச்சி அடைய வேண்டும். தேர்தல்களில் எப்படி வெற்றிபெற வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார்.அதில் முதல்வர் ஸ்டாலினை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சில தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஜெயபிரகாஷ் முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
குவிந்த போலீசார் :
இந்நிலையில், நேற்று நள்ளிரவு இரண்டரை மணியளவில் ஜெயபிரகாஷை கைது செய்ய இரணியலில் உள்ள அவரது வீட்டை நாகர்கோயில் துணை கண்காணிப்பாளர் நவீன் குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் போலீசாரை முற்றுகையிட்டதால் கைது முயற்சி தோல்வியடைந்தது.
தொடர்ந்து நான்குமணி நேரமாக போலீசாரும் பாஜகவினரும் அப்பகுதியில் குவிந்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின்பு ஜெயபிரகாஷை பாஜகவினர் நாங்கள் காவல் நிலையம் அழைத்து வருகிறோம் என கூறி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.