பிரதமரின் ஆயுளுக்காக கோயில்களுக்கு படையெடுக்கும் பாஜகவினர்.. அண்ணாமலையை தொடர்ந்து களத்தில் குதித்த ஹெச்.ராஜா!
தமிழகத்திலும் பாஜக தலைவர்கள் இன்று அதிகளவில் கோயில்களுக்கு சென்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக ம்ருத்யுஞ்ஜய ஹோமம் இன்று நடைபெற்றது.
பிரதமர் மோடிக்கு ஆயுள் வேண்டி கோயில்களில் ஹோமங்கள் நடத்துவதில் பாஜகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும் ஆயுஷ்ய ஹோமத்தை குன்றக்குடியில் செய்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் அம்மாநிலத்தில் உள்ள பதிண்டாவுக்கு விமானம் வாயிலாக சென்று பிரதமர் மோடி அங்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்திய எல்லையோரம் உள்ள சைனிவாலா கிராமத்தில் அமைந்துள்ள தேசிய சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் 42 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பெரோஸ்பூரில் தொடங்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி பிரதமர் பதிண்டா விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் சென்றிருக்க வேண்டும். ஆனால், மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து சைனிவாலா கிராமத்துக்கு சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது.
பஞ்சாப் மாநில காவல் துறைக்கு தலைமை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் பிரதமர் சாலை வழியாக பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில் சைனிவாலாவுக்கு 30 கிலோமீட்டர் முன்பாக அங்குள்ள மேம்பாலம் அருகே சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற காரணத்தைக் காட்டி பிரதமரின் வாகனங்கள் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி மீண்டும் பதிண்டா திரும்பினார். பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதால் இது நாடு முழுவதும் பேசுபொருளானது. பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக பாஜகவினர் பஞ்சாப் அரசையும் காங்கிரஸ் தலைவர்களையும் விமர்சிக்கத் தொடங்கினர்.
இதனால் பாஜக - காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வரும் நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பிரதமரின் ஆயுளுக்காக கோயிலுக்கு சென்று ஹோமம் செய்தார். பிரதமரின் ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்யும் படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவினர் கோயிலுக்கு சென்று பிரதமருக்கு ஆயுள் வேண்டியும் நலன் வேண்டியும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்திலும் பாஜக தலைவர்கள் இன்று அதிகளவில் கோயில்களுக்கு சென்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக ம்ருத்யுஞ்ஜய ஹோமம் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் குன்றக்குடியில் உள்ள கோயிலில் பிரதமரின் நலன் வேண்டி ஆயுஷ்ய ஹோமம் மற்றும் ம்ருத்யுஞ்ஜய ஹோமத்தை பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா நடத்தினார். ம்ருத்யுஞ்ஜய ஹோமம் என்பது திடீர் என உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரும் சமயத்தில் உயிரை காத்துக் கொள்ள செய்யப்படும் ஹோமம் ஆகும்.