அமித்ஷாவின் அதிரடி வியூகம் !! பீகாரில் உருவானது தேர்தல் கூட்டணி !!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனது முதல் கூட்டணியை முடிவு செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜக – ஐக்கிய ஜனதாதளம் – லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு, ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, கூட்டணி அமைப்பதில், காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிரமாக உள்ளன. பீஹாரில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
கடந்த , 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகி, ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டியிட்டது. ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சி, உபேந்திர குஷ்வாகாவின், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பாஜக போட்டியிட்டது.
அந்த தேர்தலில், பீஹாரில் மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், பாஜக 22; லோக் ஜனசக்தி, 6, ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சி, மூன்று தொகுதிகளில் வென்றன. தனித்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம், இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது.
இந்நிலையில், நிதிஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை, பாஜக தலைவர், அமித் ஷா, சந்தித்து பேசினார். இதையடுத்து பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தலா 17 தொகுதிகளிலும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான, லோக் ஜனசக்தி, ஆறு தொகுதிகளில் போட்டியிட உள்ளது