TN Local Body Elections 2022: ஹிஜாப்பை அகற்ற சொன்ன பாஜக முகவர்.. குண்டு கட்டாக வெளியே தள்ளிய அதிமுக திமுக.
பாஜக பூத் வேட்பாளர் இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப் அகற்றிவிட்டு வரவேண்டுமென குரல் எழுப்பிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதனால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணிடம் பாஜக முகவர் ஹிஜாப்பை அகற்றும்படி வாக்குவாதம் செய்ததால் மதுரை மேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அந்த பூத்தில் இருந்து பாஜக முகவரை வெளியேற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் பன்முனை போட்டி நிலவுவதால் வாக்கு பதிவு வேகமாக நடந்து வருகிறது. அதிமுக திமுகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் காலை முதலே தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து வரும் நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் எட்டாவது வார்டு அல் அமீன் பள்ளி வாக்குச்சாவடிகள் இஸ்லாமிய பெண் வாக்காளர் ஒருவர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார், அப்போது அங்கு இருந்த பாஜக முகவர் ஹிஜாபை அகற்றிவிட்டு வாக்களிக்க வருமாறு குரல் எழுப்பினார். ஆனால் அங்கு இருந்த அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அதெல்லாம் அகற்ற தேவையில்லை என கூறியதுடன், பாஜக ஏஜென்ட் கிரி ராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கிரிராஜன் அதிமுக திமுக கட்சி முகவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு குழப்பம் ஏற்பட்டது, இதனால் பாஜக பூத் ஏஜெண்ட்டை வாக்குச்சாவடி விட்டு வெளியேற்ற தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர் அவரை அங்கிருந்த கட்சியினர் குண்டுகட்டாக பாஜக முகவரை வெளியேற்றினர். அதன்பிறகு அங்கு அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பாஜக பூத் வேட்பாளர் இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப் அகற்றிவிட்டு வரவேண்டுமென குரல் எழுப்பிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதனால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என இந்துத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சீருடை அணிய வேண்டும் சீருடை என்பது பொதுவானது, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்களும் காவி தூண்டு அணிந்து வருவோம் என இந்துத்துவ மாணவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த பிரச்சனை நாடு முழுவதும் அதிர்வலையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தமிழகத்திலும் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் நடந்த ஜாப் எதிர்ப்பு போராட்டத்தை கண்டித்து தமிழகம் முழுதும் பல பகுதிகளில் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன இந்நிலையில்தான் பாஜக முகவர் கிரிராஜன் என்பவர் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னர் அவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.