Bharathi Raja speech about support to vairamuthu
கவிஞர் வைரமுத்துவை முன்னிலைப்படுத்தி தமிழகத்துக்குள் கொல்லைப்புறமாக நுழைய முயன்றால் அது நடக்கவே நடக்காது என பாஜகவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இயக்குநர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் பாரதி ராஜா, சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் கடவுள் 2. இந்த படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பாராதிராஜா, ஆண்டாள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அவரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது சரியில்லை என கூறினார்.

வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் அவருக்கு எதிராக போராட்டங்கள், கண்டனங்கள் எழுவது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், எங்களுக்கு மதம் என்பதே கிடையாது என தெரிவித்தார்.
இப்போது வைரமுத்துவை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் கொல்லைப்புறமாக நுழைய நினைத்தால் அது முடியாது. அதனை அனுமதிக்க மாட்டோம் என்று பாஜகவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்..
இந்த வைரமுத்து தமிழ் மண்ணோடு கலந்தவர்என்றும், வைரமுத்துவை கரைப்படுத்துவது வைகையை கரைப்படுத்துவது போன்றது என்றும் அவர் தெரிவித்தார்.

வைரமுத்து என்பவர் தனிமனிதன் அல்ல. இலக்கியத்திற்கும், தமிழுக்கும் அவர் ஆற்றிய தொண்டு சாதாரணமானது அல்ல. எங்களை ஆயுதம் எடுக்க வைத்து குற்றப் பரம்பரை ஆக்கிவிடாதீர்கள். என்றும் அவர் எச்சரித்தார்.
நாக்கை அறுக்க 10 கோடி என அறிவிக்கும் ஒருவர் அமைச்சராக இருந்தால் நாடு எப்படி முன்னேறும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு இங்கே பேசுவதாக எண்ண வேண்டாம். தவறுதலாக மறுபடியும் வைரமுத்து மீது எங்கேயாவது வசைபாடியோ அல்லது கைவைத்தோ பார்க்க வேண்டாம் என்று பாராதிராஜா எச்சரித்தார்.
