கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது.. சட்டப்பேரவையில் தீர்மானம் போடுங்க.. திமுக எம்எல்ஏவின் கன்னிபேச்சு .!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசியும், கேள்வி எழுப்பியும் வருகின்றனர். அதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கோரிக்கை ஒன்றை வைத்து சட்டப்பேரவையில் பேசினார். “தமிழகத்தில் நேர்மையான, திறமையான அதிகாரிகளை சிறப்புச் செயலாளர்களாக நியமித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வைக் காத்து தமிழ் தேசத்தின் தந்தையாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
சிறுபான்மையினரின் நலன் காத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்” என்று சட்டப்பேரவையில் இனிகோ இருதயராஜ் கோரிக்கை விடுத்து பேசினார்.