Besant Nagar Beach people are removed from there

விடுமுறை நாளான இன்று சென்னை பெசன்ட்நகர் கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்களை போராட்டக்காரர்கள் என நினைத்து போலீசார் துரத்தி அடித்தனர். இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி நதிநீர் பிரச்சனையில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் 6 வாரங்கள் முடிவடைந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

இதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாய பெருங்குடி மக்களும், பொது மக்களும் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட திமுக முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் இன்று திடீரென களம் இறங்கிய இளைஞர்கள் உள்ளிட்டோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளைஞர்களின் இந்தப் போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மற்றுமொரு ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல் ஆகிவிடுமோ என பயந்தனர். இதையடுத்து மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்த போலீசார், அங்கு யாரும் திரளாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று விடுமுறை என்பதால் பெசன்ட்நகர் பீச்சில் ஏராளமானோர் காற்று வாங்கிக் கொண்டிருந்தனர். ஒருவேளை இவர்கள் அனைவரும் போராட்டம் நடத்த வந்திருப்பார்களோ என அஞ்சிய போலீசார் அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தது.

பீச்சில் இருந்த கடைகளையும் உடனடியாக மூடச்சொல்லி போலீசார் வற்புறுத்தினர். இதனால் அங்கு சிறிது பேரம் பரபரப்பு நிலவியது.