தூக்கியடிக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு தேடி வந்த கூடுதல் பொறுப்பு..!
முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி பீலா ராஜேஷ் சுகாதார துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தான் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. இந்த பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து பீலா ராஜேஷ் துடிப்புடன் சிறப்பாக கவனித்து வந்தார். தினமும் கொரோனா பாதிப்பு குறித்து பேட்டியளித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென அங்கிருந்து மாற்றப்பட்டு வணிக வரித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சென்னை கொரோனா சிகிச்சை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். வருவாய் நிர்வாக ஆணையர் பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பீலா ராஜேஷ் மாற்றப்படுவதற்கு முன்பு, அவருக்கும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷுக்கும் இடையே நடந்த மோதல் காரணம் என்று கூறப்படுகிறது. இறுதியில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஜெயித்துவிட்டார். இதன் காரணமாகவே பீலா ராஜேஷ் மாற்றப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகின. இதனால், பீலா ராஜேஷ் கடும் அதிருப்தியிலும், மன வருத்தத்திலும் இருந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.