நான் தலையாட்டி பொம்மையில்ல, களையெடுக்குற கத்தி: கவர்னரின் ஆட்டம் ஆரம்பம்...
தமிழக கவர்னராக புரோகித் அறிவிக்கப்பட்டபோது, பி.ஜே.பி.யின் சரவெடியான சுப்பிரமணியசாமி ‘எனக்கு இவரை தெரியும். லஞ்சம், ஊழலுக்கு எதிரான போராளி. அரசு நிர்வாகத்திலுள்ள லஞ்சக் களைகளை வேரோடு பிடுங்கியெறிவார்.’ என்று பாராட்டி தள்ளியிருந்தார்.
உடனே ‘உங்க வாயாலேயே பாராட்டு வாங்கிட்டாரா! விளங்குனமாதிரிதான்.’ என்று இதற்கு எதிராக விமர்சனங்கள் வந்து விழுந்திருந்தன.
இந்நிலையில் சு.சா. சொன்னது போல் கவர்னர் புரோகித் அரசு நிர்வாகத்தில் கம்பெடுத்து சுற்றுவார் போல தெரிகிறது. அதன் முதல் ஆக்ஷன் நாளை கோயமுத்தூரில் துவங்குகிறது.
கோவையிலிருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் கவர்னர் அன்றே அம்மாவட்ட அரசு அதிகாரிகளிடம் ஆய்வு நடத்த இருக்கிறாராம். கவர்னர் எந்த கோப்பை எடுக்க சொல்லுவார்? எதற்கு கோபப்படுவார் என்று புரியாமல் ஆய்வு மேளாவை நினைத்து நடுங்கிப் போய் கிடக்கின்றனர் அதிகாரிகள்.
வெறும் ஆய்வுக் கூட்டத்தோடு முடிக்காமல் மறுநாள் காலையில் ஃபீல்டு விசிட், பொதுமக்களுடன் கலந்துரையாடல் என பின்னியெடுக்கப் போகிறார்.
நிர்வாக நடவடிக்கைகள் சரியில்லை என கவர்னர் நினைத்தால் உடனடியாக தனது புகாரை முதல்வர் கவனத்துக்கு கொண்டு போகவும், அவரிடமிருந்து சரியான ரியாக்ஷன் இல்லாத பட்சத்தில் மத்திய அரசு வரைக்கும் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வைக்கவும் கவர்னர் தயங்கிட மாட்டார் என்பதால் மண்டை காய்ந்து கிடக்கின்றனர் அரசு அதிகாரிகள்.
கவர்னர் இனி ஓவ்வொரு மாவட்டமாக ஆய்வுப் பணியில் இறங்கினால் நம்ம நிலைமை என்னாகும்? என அமைச்சர்களும் அரண்டுபோய் கிடக்கின்றனர்.
பன்னீரின் கைகளை பிடித்து எடப்பாடியின் கைகளில் ஒப்படைத்து ‘நண்பர்கள்யா’ என்று சிலிர்த்து சிலாகித்த வித்யாசாகர் ராவ் போலத்தான் பி.ஜே.பி.யின் கவர்னர்கள் இருப்பார்கள் என்று அ.தி.மு.க. புள்ளிகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் புதுவையில் நாராயணசாமி டீமை நோண்டி நுங்கெடுக்கும் கிரண்பேடி போல் தமிழகத்தில் புரோஹித்தும் ஆட்டத்தை ஆரம்பித்திருப்பதை கண்டு கலங்கிப் போய் கிடக்கின்றார்கள் மாண்புமிகுக்கள்.
இவங்களெயெல்லாம் வெச்சு செய்யுங்க கவர்னர் சார்!