ஸ்டாலினை வரவேற்று கெஜ்ரிவால் அரசு வைத்த பேனர்...! ஆச்சரியத்தில் உடன்பிறப்புகள்
டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளை பார்வையிட உள்ளார், இதற்காக தமிழக முதலமைச்சரை வரவேற்று தமிழால் எழுதி டெல்லி அரசு சார்பாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் ஸ்டாலின்
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள திமுக அலுவலகமான கலைஞர் அண்ணா அறிவாலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் கோரிக்கை தொடர்பான மனுக்களை பிரதமர் மோடியிடம் வழங்கினார். இதனையடுத்து இன்று காலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஸ்டாலின் சந்தித்து பேசினார். தொடர்ந்து பியூஸ்கோயல் உள்ளிட்ட அமைச்சர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
டெல்லி அரசு பள்ளியில் ஆய்வு
இதற்கிடையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ளார், அப்போது டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள ராஜ்கியா சர்வதோயா பால வித்யாலயா பள்ளியை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். அந்த பள்ளியில் நவீன வசதியுடன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தரமான கல்வி , சுகாதார வசதி என அனைத்திலும் ராஜ்கியா பள்ளி சிறந்து விளங்குகிறது. இந்த பள்ளியை பார்வையிடும் முதலமைச்சர் தமிழகத்தில் இதே போன்ற பள்ளியை அரசு சார்பாக அமைப்பது குறித்து கேட்டறிகிறார். இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி மோஹல்லா கிளினிக்கையும் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள வசிதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிகிறார்.
ஸ்டாலினை வரவேற்று பேனர்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடவுள்ள நிலையில் அவரை வரவேற்று டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் அரசு சார்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர பதாகையை பார்த்த திமுகவினர் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.