வன்னியர் சங்கத்தை தடை பண்ணுங்க... ராமதாஸ், அன்புமணி மீது வழக்கு போடுங்க... நீதிமன்றத்தில் முறையீடு..!
பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தி, போராட்டம் நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரியும், போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு பதிய கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தி, போராட்டம் நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரியும், போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு பதிய கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க கோரி, பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர், சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினர். சென்னை நோக்கி வந்த வாகனங்களை பெருங்களத்தூரிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த பாமகவினர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்களை எரிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையின் பல்வேறு இடங்களில் பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாமகவினர் 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததுடன், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய பாமகவினர் மீது நடவடிக்கை கோரியும், போராட்டம் நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது. அப்போது இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால், அதை எந்த அமர்வு விசாரிக்கும் என்பதை பதிவுத்துறை முடிவு செய்யும் என நீதிபதி தெரிவித்தார்.