கல்லூரிகளில் அரசியலுக்கு தடா...!
கல்லூரி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும்போது அரசியல் கட்சிகளின் கொள்கைகள் மற்றும் இயக்கங்களின் கருத்துகள் பற்றி பேசுவதை அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், அரசியல் தொடர்பான கலந்துரையாடலோ, விவாதமோ கல்லூரிகளில் நடத்த நிர்வாகம் அனுமதிக்க கூடாது. ஏனென்றால், அரசியல் விவாதங்கள் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால் அவற்றை பற்றி பேசுவதற்கு கல்லூரி அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்களை உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்க கல்லூரி கல்வி இயக்கத்தின் மண்டல இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் கல்லூரி நிகழ்சிகளில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார். இதை தொடர்ந்து, ரஜினிகாந்த்தும் பல்கலைகழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றினார். இந்த நிலையில் கல்லூரி வளாகத்திற்குள் அரசியல் பேச தடை என கல்வி இயக்குனர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்!