இரட்டை இலை சின்னம் முடக்கம்…கலக்கத்தில் சசிகலா, தினகரன்…
இரட்டை இலை சின்னம் முடக்கம்…கலக்கத்தில் சசிகலா, தினகரன்…
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால், அதையே பெரிதும் நம்பி இருந்த சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இரட்டை இலையால் மட்டுமே தங்களால் மீண்டும் அதிமுகவினரின் நம்பிக்கையை பெறலாம் என்று நினைத்திருந்த அவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் உள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ் என இரு தரப்பினரும் அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடி வந்தனர். ஆர்,கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் இரு தரப்பினரும் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் தங்களது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.
மிகுந்த பரபரப்புக்கிடையே நள்ளிரவில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பினரும் நியாயமாக நடக்க வேண்டும் என்பதற்காகவே இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் முடிவு தெரியும் வரை இரு தரப்பினரும் கட்சியின் பெயரையோ, சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காக இரு தரப்பினரும் தங்கள் சின்னங்களை தேர்வு செய்ய நாளை காலை 10 மணிக்கு தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
27 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது அதிமுகவிகரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபிஎஸ், தீபா, ஜெயலலிதா மரணம், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை என அடுத்துடுத்து பல சிக்கல்களை சந்தித்து வரும் சசிகலா ஆர்.கே.நகர் நகரில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலையே நம்பி இருந்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று தன்னுடைய ஆதிக்கத்தை கட்சியில் நிலை நிறுத்த வேண்டும் என நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் தற்போது அதிமுக வை வழிநடத்திச் செல்லும் டி.டி.வி.தினகரனும் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால் கலக்கத்தில் உள்ளார். இரட்டை இலை சின்னம் இல்லாமல் எப்படி இடைத் தேர்தலை எதிர்கொள்வது என்று மிகுந்த கலக்கத்தில் உள்ளார்.
மேலும் தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோகனை நடத்தி வருகிறார்