கருணை மதிப்பெண்களுக்கு தடை போட்ட சுப்ரீம் கோர்ட்…. தமிழில் நீட் எழுதியவர்களுக்கு ஏமாற்றம் !!
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நீட் தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது. மேலும் இந்த கருணை மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இன்று தடை விதித்தது. மேலும் இது குறித்து சிபிஎஸ்இ உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,