ban for dinakaran to enter admk office

அதிமுகவில் பிரிந்துள்ள இரு அணியினரும் ஒன்று சேரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நேற்று அமைச்சர் ஜெயகுமார் அறிவித்து இருந்தார். இதற்கு இடையூறாக உள்ள சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள டிடிவி.தினகரன் வீட்டில் ஆலோசனை நடந்தது. அதில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையின் முடிவில் இன்று மதியம் தலைமை அலுவலகத்தில் தனது தலைமையில் கூட்டம் நடப்பதாக தினகரன் அறிவித்தார்.

இந்நிலையில், தினகரன் அதிமுக தலைமை அலுவலகம் வந்தால் அவரை உள்ளே நுழைய விடக்கூடாது என இரு அணியினரும் முடிவு செய்துள்ளனர். அவரை உள்ளே விடாமல் தடுக்க அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கட்சியின் சின்னம் யாருக்கு என்ற போட்டி இருந்து வந்தது. தற்போது, அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு என்ற போட்டி நிலவுகிறது. இதில் தினகரனுக்கு ஆதரவு குறைவாக இருந்தாலும், பெரிய அளவில் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தையும், அரசியல் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பவும், செய்தியாக வெளியிடவும் டிவி சேனல் மற்றும் நாளேடு நடத்தி வந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் டிவி சேனல் யாருக்கு, நாளேடு யாருக்கு சேர வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.