அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலிக்கப்படும் நிலையில் செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.மஸ்தான் ரூபாய் 11,000 நிதியுதவி வழங்கிய சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி பாராட்டுகள் குவிந்து வருகின்றது. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலிக்கப்படும் நிலையில் செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.மஸ்தான் ரூபாய் 11,000 நிதியுதவி வழங்கிய சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி பாராட்டுகள் குவிந்து வருகின்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ராமர் கோயில் அமைய இருக்கிறது. இதற்கான பிரம்மாண்ட பூமி பூஜையில் பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி கலந்துகொண்டு கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தார். ராமர் கோயில் கட்டுவதற்காக தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினர் நிதி திரட்டுவது, கட்டுமானப் பொருட்கள் திரட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.ஏ.டி.கலிவரதன், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி கேட்டு மாவட்டம் முழுவதும் விஐபிகளை சந்தித்து நன்கொடை பெற்று வருகிறார். அந்த வகையில் திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான செஞ்சி கே.எஸ். மஸ்தான் சந்தித்தார்.

அப்போது ராமர் கோயில் கட்டுவதற்கு கலிவரதன் நிதியுதவி கேட்டுள்ளார். அப்போது, உடனே செஞ்சி மஸ்தான் ராமர் கோயில் கட்டுவதற்காக ரூபாய் 11,000 நிதி வழங்கினார். உடனே இச்செய்தி வைரலானது. இவரது இந்த நிதியுதவிக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பாஜகவினரும் எம்எல்ஏவுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் செஞ்சி தொகுதி எம்எல்ஏ மஸ்தான் திமுகவைச் சேர்ந்தவர். அதுவும் சிறுபான்மை முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

திமுக எம்எல்ஏ மஸ்தான் சிறுபான்மை முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் விழுப்புரம் மாவட்டத்தில் கோயில் கட்டுவதற்கு, கும்பாபிஷேகம் செய்வதற்கும் நிதியுதவியை வழங்குவார். அந்த கோயில் விழாக்களிலும் கலந்துகொள்வார். கடந்த 2019ம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அத்தி வரதரை, செஞ்சி திமுக எம்எல்ஏ மஸ்தான் குடும்பத்துடன் வந்து தரிசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.