காலையிலேயே விஜயபாஸ்கரை சுற்றிவலைத்த அதிகாரிகள்.. தொடரும் சோதனை.. கிடுக்குப்பிடி விசாரணை..
அதேபோல கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் 6 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், அவரின் உதவியாளர்கள் ரமேஷ், கார்த்தி, ஆதரவாளர் கே.சி.பரமசிவம் ஆகியோரின் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களிடம் உள்ள அனைத்து சொத்துக்களுக்கும் தேவையான ஆவணங்கள் அனைத்தும் உள்ளதால் முறையாக அதை அதிகாரிகளிடம் காட்டியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில்தான் உள்ளார் எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை அவர் அளித்து வருகிறார் எனவும் அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முன்னாள் அ.தி.மு.க போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2016-2021 ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க அரசின் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் அதிகப்படியான சொத்துக்களை முறைகேடாக குவித்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரின் உதவியாளர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், சாயப்பட்டறை, அடுக்குமாடி குடியிருப்பு என மொத்தம் 21 இடங்களில் 20 குழுக்களாக பிரிந்து 50 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள சாய் கிருபா குடியிருப்பில் உளள எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டி.எஸ்.பி ராமசந்திரன் தலைமையிலான 6 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இச்சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சோதனையானது தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகை பெற்று பணியாணை வழங்கியதாகவும், அரசு போக்குவரத்து கழகத்துடன் இணைந்து இயக்கக்கூடிய தனியாருக்கு சொந்தமான பராமரிப்பு இல்லாத பேருந்துகளை இயக்க பணம் பெற்று அனுமதி வழங்கியது உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபட்டு பல்வேறு சொத்துக்களை முன்னாள் அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர் சேர்த்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் 6 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், அவரின் உதவியாளர்கள் ரமேஷ், கார்த்தி, ஆதரவாளர் கே.சி.பரமசிவம் ஆகியோரின் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் செல்வம், முறைகேடாக சொத்துக்குவிப்பு செய்தது தொடர்பாக புகார்கள் எழுந்ததால் முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறியவே இச்சோதனையானது நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தங்களிடம் தேவையான ஆவணங்கள் அனைத்தும் உள்ளதால் முறையாக அதை அதிகாரிகளிடம் காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில்தான் உள்ளார் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை அவர் அளித்து வருகிறார் எனவும் கூறிய அவர், இது போன்ற சோதனைகள் எப்படி? எதனால்? நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் எனவும் தெரிவித்தார்.