சட்டப்பேரவை தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது..! நவ.,16ல் களைகட்டப் போகிறது ஹைகோர்ட்..!
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட சட்டப்பேரவை தொடர்பான 5 வழக்குகளை வரும் 16-ம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு, குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீஸை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு விசாரித்து வந்தார். இந்த 5 வழக்குகளின் மீதான விசாரணை கடந்த 2-ம் தேதி நடந்தது.
அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் வகையிலான வழக்குகளாக இருப்பதால் சட்டப்பேரவை தொடர்பான 5 வழக்குகளையும் தனி நீதிபதி விசாரிப்பதை விட கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தால் நன்றாக இருக்கும். எனவே கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு தெரிவித்தார்.
இதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கு, முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய வழக்கு உள்ளிட்ட சட்டப்பேரவை தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
வரும் 16-ம் தேதி சட்டப்பேரவை தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.