அன்றே சொன்னது ஏசியா நெட்... எடப்பாடி பழனிச்சாமியைக் கொந்தளிக்க வைத்த அன்வர் ராஜா.. கட்டம் கட்டிய பின்னணி!
அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதிகள் சொற்ப அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களில் அன்வர் ராஜாவும் ஒருவர். மூத்த நிர்வாகியையே கட்சியை விட்டு அதிமுக நீக்கியிருப்பதன் மூலம், அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள், அவரை நெருக்கி வந்த நிலையில், அந்த முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுத்துள்ளார்.பாஜக கூட்டணிக்கு எதிராக அன்வர் ராஜா பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார். அதையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்றாலும் அமைதியாகத்தான் இருந்தார். சிவி சண்முகம் போன்றவர்களும் அப்படி பேசியிருக்கிறார்கள் என்பதால், எடப்பாடி அமைதி காத்தார். ஆனால், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அன்வர் ராஜா பேசத் தொடங்கியது முதலே எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் அன்வர் ராஜாவுக்கு ஒத்துப்போகவில்லை. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவு செய்வார்கள் என்று ஓபிஎஸ் கூறிய பிறகு, சசிகலா தொடர்பாக அன்வர் ராஜா பேசுவதும் அதிகரித்தது. ஆனால், சசிகலாவை கட்சியில் சேர்க்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அன்வர் ராஜாவின் செயல் பிடிக்கவில்லை.
ஏற்கெனவே அன்வர் ராஜா மீது எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியில் இருந்த நிலையில்தான், ஆடியே ஒன்று வெளியானது. ‘இந்தத் தேர்தலில் ஜெயித்திருந்தால் தான்தான் அடுத்த எம்.ஜி.ஆர்.’ என்று சொல்லியிருப்பார் என்பதை அன்வர் ராஜா ஒருமையில் பேசியது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. இதன்பிறகே அவரை கட்சியில் கட்டம் கட்டும் வேலைகளை அவருடைய ஆதரவாளர்கள் செய்யத் தொடங்கினர். இதனிடையே அதிமுக அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசியதால் சிவி சண்முகம், அன்வர் ராஜாவை அடிக்கப் பாய்ந்தது, எடப்பாடி பழன்ச்சாமியைப் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டது போன்ற நிகழ்வுகளும் நடந்தன.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு பொறுமையிழந்த அன்வர் ராஜா, மீடியாக்களிடம் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார். கட்சித் தலைமையையும் விமர்சிக்கத் தொடங்கினார். கடந்த சில தினங்களாகவே எடப்பாடி பழனிச்சாமியைக் கொந்தளிக்க வைக்கும் அளவுக்கு அன்வர் ராஜா மீடியாக்களிடம் பேசி அதிர வைத்தார். இந்நிலையில்தான் நேற்று வந்த அன்வர் ராஜாவின் பேட்டி அதிமுகவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ இருப்பதால் வாக்கு இழப்பு அதிமுகவுக்குதான் ஏற்பட்டுள்ளது. இதை கட்சி தலைமை புரிந்து செயல்பட்டிருக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் சசிகலாவை கட்சியில் சேர்த்திருந்தால், அதிமுகவுக்கு கூடுதலாக 20 இடங்கள் கிடைத்திருக்கும். ஆரம்பத்தில் சசிகலாவுக்கு தொண்டர்களிடம் எதிர்ப்பு இருந்தது. தற்போது அவருக்கு ஆதரவான அலை வீசுகிறது. அதிமுக இரட்டை தலைமையின் கீழ், செயல்படுவதால் சாதகங்களை காட்டிலும் பாதகங்களே அதிகம். இரண்டு பேரிடமும் கருத்திணக்கம் இல்லை. கட்சி உடைந்தால் சின்னம் முடக்கப்பட்டு விடும் என்பதால் இருவரும் விட்டு கொடுத்து வருகிறார்கள்.” என்று அன்வர் ராஜா அளித்த பேட்டி எடப்பாடி பழனிச்சாமியைச் சீண்டியதாகச் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் கட்டம் கட்டப்படுகிறாரா மாஜி அமைச்சர் அன்வர் ராஜா.? முஷ்டியை முறுக்கும் ஈபிஎஸ் கோஸ்டி..!
ஏற்கெனவே அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள், கட்சிக்குள் ஆதரவு திரட்டி வந்த நிலையில், அதைச் செயல்படுத்துவதில் முட்டுக்கட்டையாக ஓபிஎஸ்தான் இருந்தார். ஆனால், இந்த முறை இரட்டை தலைமைப் பற்றி பேசியதால், அவரை நீக்கியே தீர வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உறுதியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்தே பெங்களூரு புகழேந்தியைக் கட்டம் கட்ட ஓபிஎஸ்ஸை அணுகிய அதே பாணியில், அன்வர் ராஜாவையும் கட்சியை விட்டு நீக்க சம்மதிக்க வைத்ததாகவும் அக்கட்சிக்குள் பேசப்படுகிறது. அன்வர் ராஜாவை கட்சியை விட்டு நீக்க, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு காத்திருந்த வேளையில், அன்வர் ராஜா அளித்த பேட்டியை வைத்து தற்போது காரியத்தை சாதித்திருக்கிறது.
அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதிகள் சொற்ப அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களில் அன்வர் ராஜாவும் ஒருவர். மூத்த நிர்வாகியையே கட்சியை விட்டு அதிமுக நீக்கியிருப்பதன் மூலம், அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.