பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டியால் இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓடுமாம்… வெறுப்பேற்றும் அருண் ஜெட்லி !!!
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றும் இதனால் இந்தியப் பொருளாதாரம் மிகச்சிறந்த முன்னேற்றம் அடையும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் மூலம் கறுப்புப் பணமும், கள்ள ரூபாய் நோட்டுகளும் ஒழியும் என்று மோடி தெரிவித்தார்.
இதே போன்று எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பொருளாதார நடவடிக்கைகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மோடி தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெருமளவு குறைந்துவிட்டதாகவும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஒரு பயனும் இல்லை என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, அங்கு இந்திய செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி ஆகியவை நீண்ட கால பலன்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இதனால் இந்தியப் பொருளாதாரம் மிகச்சிறந்த முன்னேற்றம் அடையும் என்றார். இந்த வளர்ச்சி படிப்படியாக நிகழும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சி குறை கூறினாலும், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி தலைவர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது என்றார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட சீர்திருத்தங்களால், இந்தியாவிற்கு உலக அளவில் பாராட்டு கிடைத்துள்ளது என்றும் இதனால் இந்தியாவின் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது என்றும் அருண் ஜெட்லி கூறினார்.