ஜெயலலிதாவின் உதவியாளரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை!!
ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவு தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆணையம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள், ஜெயலலிதாவுடன் வசித்தவர்கள், அவரது உதவியாளர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என அனைவரிடமும் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபாவின் கணவர் மாதவன், தீபாவின் சகோதரர் தீபக், திமுகவைச் சேர்ந்த சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்கள் அனைவரிடமும் விசாரணை ஆணையம் விசாரித்து வருவதால், ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள் சாமி, உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.
ஜெயலலிதாவின் தனிப்பட்ட மருத்துவராக இருந்த சிவக்குமார், நேற்றைய தினம் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து விளக்கினார்.
இந்நிலையில், உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள் சாமி, ஆணையத்தில் நாளை ஆஜராக உள்ளார்.