ஜெ., மரண விவகாரம்.. ஜெயா டிவி சி.இ.ஓ விவேக் ஜெயராமனிடம் ஆணையம் விசாரணை
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இளவரசியின் மகனும் ஜெயா டிவியின் சி.இ.ஓ-வுமான விவேக் ஜெயராமன் நேரில் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவு தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆணையம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள், ஜெயலலிதாவுடன் வசித்தவர்கள், அவரது உதவியாளர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என அனைவரிடமும் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபாவின் கணவர் மாதவன், தீபாவின் சகோதரர் தீபக், திமுகவைச் சேர்ந்த சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் பாதுகாவலர், உதவியாளர் என அவருடன் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சசிகலாவுக்கும் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, தன் மீது புகார் கூறியவர்களின் பெயர்கள் மற்றும் புகார் விவரங்கள் ஆகியவை சசிகலா சார்பில் கோரப்பட்டது. அவற்றை வழங்க ஆணையம் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வளர்ந்த இளவரசியின் மகனும் ஜெயா டிவியின் சிஇஓ-வுமான விவேக் ஜெயராமனை இன்று ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் உத்தரைவிட்டிருந்தது. அதனடிப்படையில் விவேக் ஜெயராமன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வளர்ந்த விவேக், ஜெயலலிதாவிற்கு பிடித்தவர்களில் ஒருவரும் கூட. ஜெயலலிதா வீட்டிலேயே வளர்ந்ததாலும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர் என்பதன் அடிப்படையிலும் விவேக்கிடம் தீவிர விசாரணை நடத்தப்படும்.