தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்துக்கு பிறகு திராவிட அரசியலா? ஆன்மீக அரசியலா? என்ற நிலைதான் ஏற்படப் போகிறது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார். கிராம சபைக் கூட்டம், தீண்டாமை ஒழிப்பு போன்றவை எல்லாம் ஆன்மீக அரசியல் கொள்கைகள். இந்தக் கொள்கைகள் ரஜினிகாந்த் தலைமையில் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் வலிமை பெறப்போகிறது.
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்துக்கு பிறகு திராவிட அரசியலா? ஆன்மீக அரசியலா? என்ற நிலைதான் ஏற்படப் போகிறது. தற்போது நடைபெற்று வரும் சாதி, மத அரசியலுக்கு முடிவு கட்டி, ரஜினியின் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஆன்மீக அரசியல் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அரசியலுக்கு வந்துவிட்ட ரஜினியின் வழி ஜனநாயகப் போர்க்களத்தில் தனி வழி. அவருடைய வழி ஆன்மீக வழி, அற வழி. அரசியல் ஆட்சி அதிகாரத்தை நோக்கி அவர் செல்லவில்லை. மக்களிடையே அவர்களுக்கான ஆட்சியை ரஜினி ஏற்படுத்தப் போகிறார்” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred