திமுக பிரமுகருடன் வாக்குவாதம்.. இரவோடு இரவாக தூக்கியடிக்கப்பட்ட போக்குவரத்து காவலர்..!
தஞ்சையில், திமுக பிரமுகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் இரவோடு இரவாக ஆயுத படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில், திமுக பிரமுகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் இரவோடு இரவாக ஆயுத படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் நேற்று முன்தினம் அண்ணா சிலை அருகே போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் ஊரடங்கை மதிக்காதவர்களை எச்சரித்து அனுப்பினர். அப்போது, உரிய ஆவணம் இல்லாமல் வந்த லோடு ஆட்டோவுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உடனே லோடு ஆட்டோவில் வந்தவர்கள் திமுக நகர துணை செயலர் நீலகண்டனுக்கு போன் செய்துள்ளனர்.
சில நிமிடங்களில் ஆதரவாளர்களுடன் அங்கு வந்த நீலகண்டன் ஆட்டோவுக்கு அபராதம் விதித்ததை ரத்து செய்யும்படி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இதற்கு எல்லாம் சிபாரிசுக்கு வரலாமா என நீலகண்டனிடம் கேட்ட போக்குவரத்து காவலர் மோகன் 'என் தெருவில் இரண்டு வாரமாக தண்ணீர் வரவில்லை. அதை தீர்த்து வைங்க வரவில்லையே என கூறியுள்ளார்.
இதையடுத்து நீலகண்டன் அங்கிருந்து கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணை நடத்திய டி.எஸ்.பி. பாரதிராஜன் நேற்று முன்தினம் இரவே போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோகனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.