தான் என்றுமே கட்சிப்பதவிக்கு ஆசைப்பட்டதில்லை என சசிகலா கூறியதாக அவரிடம் பேட்டி எடுத்த திருநங்கை அப்சரா பதிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்ட், மைக்கேல் ஷூமேக்கர், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்களை பேட்டி எடுத்து பிரபலமானவர் அப்சரா ரெட்டி .
திருநங்கையான இவர் ஜெயலலிதாவின் மீது அபிமானம் கொண்டு அதிமுகவில் தன்னை இணைத்துகொண்டார். இவர் சமீபத்தில் ‘ப்ரவோக்’ மாத இதழுக்காக சசிகலாவிடம் பேட்டி எடுத்துள்ளார்.
இது பற்றி ஒரு நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் சசிகலாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

நான்கு மாதங்களுக்கு முன்பே சசிலகா நேர்காணலுக்கு அனுமதி கேட்டிருந்தேன். இந்த நேரத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை சொல் லியாக வேண்டும். நான் ஜெயலலிதா கையால் அதிமுக உறுப்பினர் அட்டை பெறவேண்டும் என்று சொன்னபோது ’திருநங்கைக்கு இவ்வளவு முக்கி யத்துவம் தேவையா?’ என அதிமுக-வில் உள்ள சிலர் முட்டுக்கட்டை போட்டார்கள்.
ஆனால், சசிகலா தான் எனது கடிதத்தை பரிசீலித்து எனது விருப்பத்தை நிறைவேற்றினார். கடந்த மே மாதம் ஜெயலலிதா கையால் நான் உறுப்பினர் அட்டை பெற்றேன். அப்போது சசிகலா என்னை வாழ்த்தினார்.
சசிகலாவிடம் பேட்டி எடுத்த போது தான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் நிதானமாகவும், நேர்மையாகவும் பதிலளித்தார் .
சுமார் 4 மாதங்களுக்கு முன்பே சசிகலாவிடம் பேட்டி எடுப்பதற்கு அனுமதி கேட்டிருந்தேன். ஆனால், ஜெயலலிதா இறந்த 10 நாட்களுக்கு பிறகு அவர் சம்மதம் தெரிவித்தார்.
5 நிமிடங்கள் மட்டும் போதும் என அவரிடம் அனுமதி கேட்டேன். ஆனால், 45 நிமிடங்கள் என்னுடன் மனம் விட்டு பேசினார்.
ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட நட்பு முதல் இறுதியாக அப்பல்லோவில் கரைந்த நிமிடங்கள் வரை அனைத்தையும் வெளிப்படையாக கூறினார்.
மேலும், தான் கட்சி பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், அக்கா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு பெற்றிருக்க முடியும். ஆனால், தற்போது வரை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் இருக்கிறேன் என கூறினார்.
மேலும், தன்னைப்பற்றி வரும் வதந்திகள்குறித்து உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் அளவுக்கு பக்குவப்பட்டிருக்கிறார் என அப்சரா ரெட்டி கூறியுள்ளார்.
