appolo hospital inspection cancel by enquiry commission
அப்பல்லோ மருத்துவமனையில் இன்று நடைபெறுவதாக இருந்த ஆய்வை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையம் ரத்து செய்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து நடத்தி வருகிறது.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு அறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோரை விசாரணை ஆணையம் நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கறிஞர்கள் இன்று காலை 10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு செய்ய இருந்தனர்.
இந்த நிலையில், வழக்கறிஞர்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு வசதியாக முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்றும், அதனால் மற்றொரு நாளில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகவும், அதை ஏற்றுக் கொண்டு இன்று நடைபெற இருந்த ஆய்வுப்பணி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
