apollo hospital doctor presence inquiry commission
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் சத்தியபாமா, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக், தீபாவின் கணவர் மாதவன், ஜெயலலிதாவின் உறவினர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ என்று தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதுதொடர்பாக விளக்கமளிக்க சசிகலா, அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியது.
சசிகலா மௌன விரதம் இருந்துவருவதால், அவர் நேரில் ஆஜராகமாட்டார். அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது, வழக்கறிஞர் ரஜா செந்தூர் பாண்டியன் 4 வீடியோக்களை விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையின் கண்காணிப்பாளரும் மருத்துவருமான சத்தியபாமா, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தது தொடர்பான ஆவணங்களை சத்தியபாமா, விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனை சார்பிலிருந்து விசாரணை ஆணையத்தில் முதன்முதலில் ஆஜராகும் நபர் சத்தியபாமா என்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
