ஆன்மீகம் எப்படிய்யா அரசியலாகும்? கையை வெட்டுனா அது புரியும்!: சொன்னது யார்?
உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி...
ஹிந்து என்பது மதம் அல்ல: அது ஒரு வாழ்க்கை முறை. அதனால் தான் நம் நாடு, ஹிந்துஸ்தான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது - வெங்கய்யா நாயுடு.
* நேருவும், லால்பகதூர் சாஸ்திரியும் காங்கிரஸ்காரர்கள். ஆனால் நேருவைப் போல் சாஸ்திரி, ஆர்.எஸ்.எஸ். மீது விரோத மனப்பான்மை உடையவர் அல்ல.
- அத்வானி
* ஒரு துளி தேன் பல தேனீக்களை கவர்ந்து இழுக்கும், ஒரு துளி விஷம் பல உயிரிர்களை கொன்றுவிடும். அதேபோல் நாம் சொல்லும் ஒரு சொல்லால் நன்மை! தீமை ஏற்படக்கூடும்.
- மாதா அமிர்ந்தானந்தமயி
* நான் யாரையும் தரக்குறைவாகவோ, ஒருமையிலோ பேசுபவன் அல்ல. ஆனால் முதல்வர் பழனிசாமி ஆத்திரத்தின் உச்சியில் என்னை மிகக்கடுமையாக விமர்சிக்கிறார்.
- தினகரன்
* நாங்கள் அறிமுகப்படுத்தும் ‘ஆப்’ மாநிலத்தின் வளர்ச்சிக்கானது. ஆனால் திடீரென கிளம்பி வரும் நடிகர்கள் ‘ஆப்’ அரசியலில் ஈடுபடுகின்றனர். அவர்களின் இந்த ‘ஆப்’ அவர்களுக்கே ஆப்பு வைக்கும்.
- அமைச்சர் ஜெயக்குமார்
* பஸ் கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சேவை மனப்பான்மையோடு மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- அமைச்சர் உதயக்குமார்
* பா.ஜ.க. ஒரு தேசிய கட்சியாக இருந்தாலும் கூட தமிழகத்தில் அது பெரிய பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் டிபாசிட் வாங்குவது சந்தேகமே.
- வைகைச்செல்வன்
* ஆன்மிக அரசியல் என்பது எனக்கு புரியாததாக உள்ளது. ஆன்மிகம் என்பது இறைவனின் வழிபாடு. அதில் எப்படி அரசியலை நுழைக்க முடியும்?
- முதல்வர் நாராயணசாமி
* பிரதமரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்குமளவுக்கு எனக்கு டில்லியில் செல்வாக்கு உள்ளது.
- முதல்வர் சந்திரபாபு நாயுடு
* இந்தியாவில் 60 சதவீத பெண்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களாலேயே பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக ஆய்வு சொல்கிறது. பாகுபலி 2 படத்தில் என்னை தொடுபவரின் கையை வெட்டுவேன். அதுபோல நிஜவாழ்க்கையிலும் வக்கிர புத்திக்காரர்களின் கையை வெட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு புரியும்.- நடிகை அனுஷ்கா.