பாஜக பெண் நிர்வாகியுடன் கே.டி.ராகவன் ஆபாச வீடியோ காலில் பேசிய விவகாரம் வெளியான போது எழுந்த பரபரப்பை விட ராகவனுக்கு ஆதராக சீமான் பேசியது தான் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது.

கே.டி.ராகவனுக்கு ஆதரவாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமாடியது தம்பிகள் சிலரையே அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் திடீரென அண்ணன் சீமான் ஆர்எஸ்எஸ் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாஜக பெண் நிர்வாகியுடன் கே.டி.ராகவன் ஆபாச வீடியோ காலில் பேசிய விவகாரம் வெளியான போது எழுந்த பரபரப்பை விட ராகவனுக்கு ஆதராக சீமான் பேசியது தான் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. சீமான் மீது புகார், எதிர்ப்பு போராட்டம் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பரபரப்பாக இயங்கினார். மேலும் ராகவனுக்கு ஆதரவாக சீமான் பேசியது ஏன் என பட்டிமன்றமே நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக சீமான் – அண்ணாமலை இடையே கூட வார்த்தை போர் நடைபெற்றது. ஆனால் திமுக இணையதள உடன் பிறப்புகளோ, சீமானுக்கு ஆர்எஸ்எஸ் உடன் இருக்கும் தொடர்பை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என புது கோணத்தில் விமர்சனத்தை முன்வைத்தனர்.

பாலியல் புகார்களில் ஆண்கள் மீது புகார் கூறாமல் அது பிரைவேட் விஷயம் என சீமான் பேசியிருப்பது ராகவனை காப்பாற்றத்தான் என்றும் இதற்கு முன்பு சீமானுக்கு இது போன்ற பிரச்சனைகள் வந்த போது, பாஜக மறைமுகமாக உதவியுள்ளது. எனவே தான் தற்போது வெளிப்படையாகவே ராகவனுக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்தன. பாலியல் புகார் விவகாரத்தில் சீமான் கட்சிக்காரர்கள் – பாஜக இடையே ரகசிய உடன்பாடு உள்ளது என்றெல்லாம் ஜோதிமணி பேச ஆரம்பித்தார். இந்த நிலையில் சென்னையில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், சுதந்திர போராட்ட காலத்தில் டவுசரை போட்டுக் கொண்டு பிரிட்டன் ராணிக்கு சலாம் போட்டவர்கள் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் என தாக்குதலை தொடுத்தார். அத்தோடு பிரதமர் மோடி குறித்தும் நீண்ட நாட்களுக்கு பிறகு சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இவைக்கு எல்லாம் காரணம், கே.டி.ராகவன் விவகாரத்தில் நாம் தமிழரையும் – பாஜகவையும் இணைத்து காங்கிரசும், திமுகவும் முன்வைத்த விமர்சனங்கள் தான் என்கிறார்கள். சட்டப்பேரவை தேர்தலில் 30 லட்சம் வாக்குகளை பெற்று நாம் தமிழர் கவுரவமான நிலையை பெற்றுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலின் சீமான் கூடுதல் கவனம் செலுத்த உள்ளார்.

தேர்தல் சமயத்தில் தேவையில்லாமல் பாஜகவோடு நாம் தமிழரை இணைத்து பேசுவதை சீமான் விரும்பவில்லை என்கிறார்கள். இதனால் தான் திடீரென பாஜகவோடு சேர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பையும் சீமான் விமர்சிக்க ஆரம்பித்துள்ளாராம்.