அடக்கி வாசிங்க அண்ணே..! ஆப்பு வெச்சுடாதீங்க: ஹெச். ராஜாவை சைலண்ட் மோடில் போட துடிக்கும் அண்ணாமலை
அசால்ட் பேச்சினால் உச்சம் தொட்டவர் ஹெச். ராஜா. ஆனால் அதே அதிரடி பேச்சால்தான் அவர் வீழவும் செய்கிறார்
பேசிப் பேசியே வளர்ந்த இயக்கங்கள்தான் திராவிட இயக்கங்கள். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பேச்சால் வளர்ந்த இயக்கங்கள்தான். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அண்ணா பேசுகிறார் என்றால், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து மாட்டு வண்டி கட்டிக் கொண்டு ஒரு நாளுக்கு முன்பாகவே குடும்பத்தோடு வந்து சேர்வான் தொண்டன். இப்படித்தான் வளர்ந்தன இரு பெரும் திராவிட இயக்கங்களும். அந்த லிஸ்டில் பாஜக-வும் இடம்பெறும் போலிருக்கிறது.
ஆனால், மேடைக்கு கீழே பிரஸ்மீட்டிலும், அறிக்கைகளிலும் சில நிர்வாகிகள் ச்சும்மா அள்ளிவிடும் பஞ்ச் டயலாக்குகளால்தான் அக்கட்சி பெரும் காயங்களை சந்திக்கிறது.
தமிழக பா.ஜ.க.வில் அசால்ட் பேச்சினால் உச்சம் தொட்டவர் ஹெச். ராஜா. ஆனால் அதே அதிரடி பேச்சால்தான் அவர் வீழவும் செய்கிறார். அதோடு அக்கட்சியும் விமர்சனங்களை அடிக்கடி சந்திக்கிறது. அந்த வகையில், தற்போது ராஜா “எந்த பிரச்னையும் இல்லாமல், தேர்தல் நடக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. ஆனால் எங்கள் வேட்பாளர்கள், கட்சியினர் பிரசாரம் செய்வதற்கு தி.மு.க. முட்டுக்கட்டையாக இருக்குமானால் அவர்களுக்கு பதிலடி தர எங்களுக்கு சக்தி இருக்கிறது.” என்று அதிரடியாய் பேசியுள்ளார்.
ராஜா ஆவேசத்தை துவக்கிவிட்டதைக் கண்டு, “ஆஹா இவரு ஆரம்பிச்சு ஏதாச்சும் சர்ச்சையா பேசி வெச்சார்னா, இந்த நெட்டிசனுங்க கம்முன்னு இருக்க மாட்டாங்களே. எப்படா இவரு விவகாரத்தை ஓப்பன் பண்ணுவார், அதை வெச்சு ஏதாச்சும் சிக்கலை உருவாக்கி, பா.ஜ.க.வின் செல்வாக்கை குறைக்கலாம்னு திட்டம் போட்டு இருக்காங்க, அதுக்கு ஏத்த மாதிரி இவரும் ஆரம்பிக்குறாரே. அண்ணே ராஜாண்ணே கொஞ்சம் கம்முன்னு இருங்க. இல்லேன்னா, ரொம்பவே அடக்கியாச்சும் வாசிங்க. இல்லேன்னா வன்முறை பேச்சு, விதி மீறல் பேச்சுன்னு எதையாவது இழுத்துவிட்டு, கட்சியோட கதையை கந்தல் பண்ணிடுவாங்க.” என்று புலம்பிக் கொட்டுகின்றனர் முக்கிய நிர்வாகிகள்.
அவர்கள் இந்த விஷயத்தை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் ஒரு புகாராகவே சொல்லி, ‘ராஜாவை அடக்கி வையுங்க. இல்லேன்னா சிக்கல் உருவாகிடும்.’ என்று சொல்ல, அவரோ தேசிய நிர்வாகிகள் மூலமாக ஹெச். ராஜாவை சில நாட்களுக்கு சைலண்ட் மோடில் போட்டு விடும் மூவ்களில் இருக்கிறாராம்.
ஆஹாங்..!