தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆக முடியாது... தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் அண்ணாமலை..!
இனி தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் மாதிரி செய்தி போட முடியாது. ஒழுங்குமுறை வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்திருக்கிறது
அரசியலில் இணைவதற்காக ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர் அண்ணாமலை. அவரை பா.ஜ.க., மாநில தலைவராக நியமித்து அக்கட்சியின் தேசிய தலைமை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இந்நிலையில், கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை யாத்திரைப்போல வந்த அண்ணாமலை இன்று தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர். பின்னர் பேசிய அண்ணாமலை, “தேசபக்தி காரணமாக ஐ.பி.எஸ். வேலையை விட்டுவிட்டு கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தேன்.மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்ப்பதே பாஜகவின் நிலைப்பாடு; தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். நீட் தேர்வு வந்த பிறகும் ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடிகிறது; இதுவே உண்மையான சமூக நீதி. கடைக்கோடி மனிதர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் கட்சி பாஜக . நீட் தேர்வு வந்ததுக்கு பின்புதான் பணமில்லாத ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்வி பயில முடிகிறது; இதுவே உண்மையான சமூக நீதி.
நேற்று ஒரே நாளில் 96 கோடி டோஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தடுப்பூசிகளை வழங்கவில்லை என குற்றச்சாட்டை மாநில அரசு முன்வைக்கிறது. தமிழக மற்றும் இந்திய ஊடகங்களின் மீது பாஜக மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது.
ஐ.டி. சட்டம் குறித்து நான் பேசியதை ஊடகங்கள் குறித்து பேசியதாக தவறாக சித்தரிக்கின்றனர். இனி தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் மாதிரி செய்தி போட முடியாது. ஒழுங்குமுறை வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்திருக்கிறது’’ என அவர் தெரிவித்தார்.