திராணி இருந்தால்..! முடிந்தால் என்னை 24 மணி நேரத்திற்குள் கைது செய்யுகள்.! திமுக அரசுக்கு சவால் விட்ட அண்ணாமலை
வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் 4 பிரிவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், திராணி இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்.?
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூகவலைதளத்தில் பொய் செய்தி பரவி வரும் நிலையில், வட மாநில தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்ப செல்வதாகவும் தகவல் பரவியது. இந்தநிலையில் பொய்யான தகவலை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில் பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், வட மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊறுக்கு செல்ல காரண திமுக தான் என குற்றம்சாட்டியிருந்தார். திமுக வின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டவற்றால் தான் வட மாநிலத்தவர்கள் மீதான வெறுப்பு என்று அதில் அவர் குறிப்பிடிருந்தார்.
அண்ணாமலை மீது வழக்கு பதிவு
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் வட மாநில தொழிலாளர்களை அவமான படுத்தும் நோக்கில் பேசி வருவதாக அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல்,இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல்,குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முடிந்தால் கைது செய்யுங்கள்
இதனையடுத்து பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்! என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்