கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ள நிலையில் அவர் சொந்த ஊரை தாண்ட முடியாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ள நிலையில் அவர் சொந்த ஊரை தாண்ட முடியாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், நகை கடன் தள்ளுபடி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் திட்டம் என பல்வேறு செயல்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களுக்கு பயன் பெறும் வகையில் தமிழக அரசின் சாதனைத் திட்டங்கள் தொடர்ந்து அமையும். 72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லையெனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அவ்ளோ தைரியமா? பாத்துடலமா?

இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட என்ன தகுதி இருக்கிறது. அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை தாண்ட முடியாது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று கூறியவர் அண்ணாமலை. தற்போது அவர் பாஜக தலைவர். இவர் தமிழகத்துக்கு என்ன செய்யப்போகிறார் ? மத கலவரத்தை உருவாக்க பார்க்கிறார் அண்ணாமலை. இது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி; சவாலுக்கு பயப்பட மாட்டோம் என்று தெரிவித்தார்.

முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை திமுக அரசு குறைப்பேன் என்று கூறி உள்ளது 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைத்து கொடுக்க வேண்டும், சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும். இல்லை என்றால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும். 72 மணி நேரத்திற்குள் சொன்னத்தை செய்யவில்லை என்றால் கோட்டையை பாஜக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.