ஒரு வழியாக அண்ணா தொழிற்சங்க தேர்தலுக்கான தேதி அறிவிப்பு.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!
அண்ணா தொழிற்சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அண்ணா தொழிற்சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுகவில் அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளது. இதில் போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் அடங்கும். கடந்த 40 ஆண்டுகளாக அண்ணா தொழிற்சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், அண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாக, வருகின்ற ஆகஸ்ட் 14, 22, 29 ஆகிய தேதிகளிலும் செப்டம்பர் 7, 17 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். இதற்கான கால அட்டவணை இத்துடன் வெளியிடப்படுகிறது.
அதே போல், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளில் தேர்தல்களை நடத்துவதற்காக, தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பணிமனைகளின் தேர்தல் ஆணையாளர்களாகக் கீழ்கண்டவர்கள், கீழ்கண்டவாறு நியமிக்கப்படுகிறார்கள்.
ஆகவே, கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை முறைப்படி நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.