தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருப்பதாக நினைத்து கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் அங்கிருந்த செய்தியாளர்கள்.  

காலைநேர பரபரப்பில் இருந்தது திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம். முதல் பரபரப்பை கொளுத்திப்போட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமார் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து முடித்த சில மணித்துளிகளில் நிருபர்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காரை விட்டு தனது சகாக்களுடன் இறங்கி அறிவாலய அலுவலகத்துக்குள் நுழைய முயன்றார் அந்த நபர். தூரத்தில் இருந்த நிருபர்கள், அவரை எடப்பாடி தான் இங்கு வந்துள்ளார் என நினைத்துக் கொண்டு பதறியடித்துக் கொண்டு அந்த நபரிடம் ஓடிச்சென்றனர். அப்போது தான் அவர் எடப்பாடி பழனிசாமி சாயலில் இருப்பவர் என்பது தெரிய வந்தது. 

யார் சார் நீங்க..? முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாதிரியே இருக்கீங்க..? என நிருபர்கள் ஆவலாகக் கேட்க, அந்த நபர். ‘நான் எடப்பாடி பழனிசாமியின் பெரியம்மா மகன். நெடுங்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். அதிமுகவில் வெகுநாட்களாக இருந்தேன். இப்போது திமுகவில் இணைய வந்துள்ளேன்’’என அவர் கூறிய பிறகே நிருபர்கள் தெளிவடைந்தனர்

அதன் பிறகே சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான விஸ்வநாதன் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அச்சு அசலாக எடப்பாடியாரின் முகச்சாடை இருந்ததால் அவரது உருவம் நிருபர்களை சில நொடிகள் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.