லஞ்சம் வாங்கி சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காமல் பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

லஞ்சம் வாங்கி சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காமல் பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை சென்னை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையராக இருப்பவர் நடராஜன். இவர் லஞ்ச வாங்கியதாக புகார்கள் எழுந்தன. இதை அடுத்து கடந்த வாரம் சென்னை, எழிலகத்தில் அவரது அறையிலும், அவரது உதவியாளர் முருகன் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில், 35 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் நடராஜன் திருநெல்வேலிக்கும், முருகன் நாகர்கோவிலுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த செயலுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

இதுதொடர்பாக, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த 14 ஆம் தேதி நடத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு சோதனையில் 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமான துணை ஆணையர் -1 நடராஜன் எந்த தண்டனையும் இல்லாமல் நெல்லைக்கு இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பணத்துடன் சிக்கிய அதிகாரி குறித்து விசாரித்த போது, அவர் பதவி உயர்வு வழங்க 7 பேரிடமிருந்து தலா ரூ.5 லட்சம் வசூலித்தது உறுதியாகியுள்ளது. பதவி உயர்வுக்காக மேலும் 35 பேரிடமிருந்து ரூ.1.75 கோடி வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அவர் மீது காவல்துறை வழக்கும் பதிவு செய்திருக்கிறது.

Scroll to load tweet…

சம்பந்தப்பட்ட அதிகாரி 2019 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு ஆர்டிஓ ஆக இருந்த போது அவரது அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையிட்டு, ரூ.88 லட்சம் பணத்தை கைப்பற்றியதுடன், வழக்கும் பதிந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அவரது துறையினரே பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். கையூட்டு பணத்துடன் சிக்குபவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எந்த சோதனையும், எந்த கைது நடவடிக்கையும் இல்லாமல் இட மாற்றத்துடன் அந்த ஊழல் அதிகாரி தப்பவிடப்பட்டிருக்கிறார். இது பெரும் அநீதி. ரூ.100 கையூட்டு வாங்கியதற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், ரூ. 2.10 கோடி கையூட்டு வாங்கிய அதிகாரி தப்பவிடப்படுகிறார் என்றால், அது ஊழலை ஒழிக்க உதவாது. ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.